ஞாயிறு, 13 செப்டம்பர், 2015



உடன்பிறப்பே..
உயிர்மூலத்தின் மறுபதிப்பே...
உனக்காக செலவு செய்யும்
நேசம் அத்தனையும் 
உடனுக்குடன் சேமிப்பில்
இரட்டிப்பாகிறதே எப்படி.?!
உனக்கான நேசத்தைச் சுமப்பதில் - என்றுமே
நிறைமாத கர்ப்பிணி நான்..!
உனக்காக ஒரு கவிதை எழுதிட
எத்தனித்து எத்தனித்து ஏமாந்ததுண்டு –
ஏனென்று யோசித்ததில் தெரிந்தது -
மொழிகளில் வடிக்க இயலாத
உயிர்க்கவிதை நீ என்று...
அம்மாவும் அப்பாவும் -
உனக்கும் எனக்கும்
பாசத்தைப் பங்கிட்டார்கள்...
பங்கீடு செய்யும் நிலைமை
எனக்கு இல்லை..
மொத்தப் பாசத்தையும்
முழுதாய்க் காட்டிடச்
சித்தமானேன் நான் இறையருளால்...
அண்டத்திற்கு ஒரு சூரியன் போல,
அகிலத்திற்கு ஒரு நிலவு போல;
வாழைக்கு ஒரு குலை போல,
வள்ளுவனின் ஒரு நூலைப் போல;
திலகவதிக்கு ஒரு அப்பர் போல,
குந்தவைக்கு ஒரு அருண்மொழி போல-
பிரபாவுக்கு ஒரு பிரகலாதன்.
என்றும் என் அன்புத் தம்பி நீ...
எங்கள் மூவரின் செல்லப்பிள்ளை நீ..
இம்மியளவும் குறையாத
எங்கள் பாசம் -
இன்னும் பல்கிப் பெருகி -எம்
இதயக்கிடங்கில் காத்திருக்கிறது-
பிரகலாதனின் பிள்ளைக்காய்...
உன்னைவிட இன்னும் உயர்வாய்,
அன்னையிடம் சீராட்டும்,
அப்பாவின் பாராட்டும் - இந்த
அத்தை மடித் தாலாட்டும்
உன் மக்கள் கண்டு
உன் குலம் தழைத்திட ,
உயர்ந்து செழித்திட,
நிறைவும் நிம்மதியும் கொண்டு
நீடூழி நீ வாழ வாழ்த்துகிறேன்...
வாழ்க பல்லாண்டு..
வாழ்க நலமுடன்...
வாழ்க வளமுடன்...
அன்புத் தம்பிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்....!!!

                                                       பெப்ரவரி 15,2015-இல் எழுதியது..

கருத்துகள் இல்லை: