ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

அப்துல் கலாம்...!
அப்பழுக்கற்ற சிந்தனைகள்..
ஆரவாரமில்லாத சாதனைகள்..
வெள்ளைத் தலையும் ,
பிள்ளைச் சிரிப்பும் - உன் 
பிரத்தியேக அடையாளங்கள்..!
எங்கள் மனங்களில் நீ
கனவுகள் விதைத்தாய்...
இந்திய மண்ணிலெங்கும்
பசுமையினை விளைவித்தாய்...!
ஐந்தாண்டுகாலம் 'முதல்குடிமகன்'-
பதவி உன்னை அலங்கரிக்கவில்லை..
உன்னால் அப்பதவி அலங்கரிக்கப்பட்டது...!
ராமேஸ்வரம் தந்த மாமனிதன்...
ராஷ்ட்ரபதி பவன் கண்ட மாமேதை...!
மதம் விடுத்து மனிதம் போற்றினாய்..
மக்கள் மனதில் நிலையாய் நிறைந்தாய்..
உயரிய பதவிகள் பல வகித்தாய்..
உண்மையின் உருவாய் நீ சொலித்தாய்..!
எண்ணும் எழுத்தும் கண்ணாய்ப் போற்றினாய்..
எதிர்மறை எண்ணங்களைத் தூற்றினாய்..
தமிழார்ந்த சான்றோனாய்த்
தரணியெங்கும் புகழ்படைத்தாய்..!
மாணவர்களுக்கு உற்சாகமூட்டினாய் - அவர்தம்
மனதில் நற்சிந்தனைத் தீமூட்டினாய்..
இளைஞர்களுக்கு எழுச்சியூட்டினாய்..
இந்தியாவிற்கு நல்வழி காட்டினாய்...!
அறிவியலும் ஆராய்ச்சியும் உனது துறை..
ஆசிரியப்பணியோ உனது மறை..
புன்னகையே உனது உறை - உன்னிடம்
புறமுதுகு காட்டி ஓடியது அரசியல் கறை..
பள்ளிச்சிறார்களுக்கு உனது மனம்
இன்பச்சிறை...
பாரத தேசத்திற்கு நீ செலுத்தினாய்
பாசத்திறை...
நிறைகுடமே தளும்பாது - நீயோ
நிறைகடல் - தளும்புவதேது..!
தாய்த்தமிழ்த் திருநாட்டில்--
எம் பெற்றோர்க் காலத்தில்
கர்மவீரர் காமராசர்...!
எம் காலத்தில் எங்கள்
கனவுகளின் நாயகன் 'கலாம்'..!
அக்னி நாயகன் ' அப்துல் கலாம்'..!
ஏவுகணை நாயகன் ' ஏ.பி.ஜே.அப்துல் கலாம்'..!
அவர் நினைவுகள் நிரந்தரமானவை- அழிவதில்லை...
எங்கள் மனங்களில் அவருக்கு மரணமில்லை..!!!
வாழ்க நின்புகழ்!!! வளர்கிறோம் நின்வழியில்!!!
பெருமதிப்பிற்குரிய மாமனிதர், பாரத ரத்னா Dr.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களுக்கு- ஒரு தமிழ்மாணவியாக எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன்..

                                                                           ஜூலை 29,2015-ல் எழுதியது..

கருத்துகள் இல்லை: